Spilling out content through fingertips

Last updated on Sunday, September 22, 2024 , 20:18

பேருந்து நிலையக் காத்திருப்பிலே...

story rants imagination human tamilpost
Written on June 8, 2023

மணி 8:50 இருக்கும் . மக்கள் கூட்டம் அலை மோத துவங்கியிருந்தது .பேருந்து நிலையத்தின் இரும்பு இருக்கைகளில் அமர்ந்து வாகனங்கள் நகர்வதைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன் . (இது கற்பனையே . ) உண்மையில் அனைவரைப்போல எனது அறிவாற்றல் மிக்க திறன் பேசியின் தொடுதிரையில் புன்னகையை வரவழைக்கும் உருமாற்றப்பட்ட, எழுத்துகள் சேர்க்கப்பட்ட அசையா படங்களைப்பார்த்துக்கொண்டிருந்தேன் . முகநூல் , படவரி , கீச்சகம் , படித்துவிட்டீர் போன்ற சமூக ஊடக செயலிகளில் தான் பெரும்பாலான நேரம் கழிகிறது.

Bus_standq

10 நிமிடங்கள் கடந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த பேருந்தும் தென்படுவது போன்று தெரியவில்லை. இருப்பினும் பதற்றம் மனதில் தோன்றாமல் இருந்தது. அதிகாலையில் அயராது முதல் பேருந்திற்காக காத்திருந்த அனுபவங்கள் எப்போதும் கைகொடுக்கும். மேலும் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தேன்.

கூட்டம் கலையத் துவங்கியது. பிடிவாதமாக பேருந்தில் தான் செல்வேன் என காத்திருப்போர் பட்டியலில் என்னை நானே இணைத்துக்கொண்டேன் . மேலும் ஒரு 10, 20 ரூபாய் தானே என்று பகிரவூர்தியில் செல்லப் போகிறேன் என்று கட்சி மாறியவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. கொள்கைகள் என்றுமே மாறுதலுக்கு உரியவை தான் . ஆனால் சில மணித்துளிகள் மட்டுமே ஒரு மாற்றத்துக்கு தேவையான நேரமா என்பது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய ஒரு தலைப்பாகும். அதற்கான நேரம் வரும். ஆனால் இந்த பேருந்து எப்போது வரும்?

பகிரவூர்தி ஓட்டுனர்களின் சிறப்பான பரப்புரையும் , ஆளும் பேருந்தினர் ஆட்சியின் தற்போதைய செயல் படாத தன்மையும், வாக்காளர்களை எளிதாக அவர்கள் பக்கம் திருப்பியது. இறுதியில் பகிரவூர்தி கட்சி 80 சதவீத ஓட்டுகளைப் பெற்று வெற்றியடைந்தது. மீதமுள்ள 20 சதவீதமோ அடுத்த சுற்றிலாவது வருவார்களா என காத்துக்கொண்டிருந்தோம் .

மேலும் 10 நிமிடங்கள் கடந்தன. வினாடிகள் நர நர ~~ நகர நகர ~~பர பர நரிங்க நெருங்க விறுவிறு வேங்கை இறங்க வெல வெல எதிரி பதுங்க வினாக்கள் எண்ணப்பெட்டகத்தில் இருந்து உதித்த வண்ணம் இருந்தன. சூரியனும் நடு வானில் உதிப்பதற்காகத் தனது கதிர் பாதங்களை பதிக்கத்தொடங்கிவிட்டது. இருப்பினும் மனதை திடப்படுத்திக்கொண்டு ஒரு 5 நிமிடம் காத்திருப்போம் என்று அமர்ந்தேன்.

அப்போது தான் கடைசியாக வந்தார் விநாயக். (அவர் உண்மையான பெயர் தெரியவில்லை - தற்காலிகமான இட நிரப்பியாக பயன் படுத்திக்கொள்கிறேன்) . உங்களது கைபேசியை கொடுங்கள் ஒரே ஒரு அழைப்பை மட்டும் செய்து கொள்கிறேன் என்றார். பேருந்திற்கும் பகிரவூர்திக்கும் கற்பனையில் சண்டை மூட்டிக்கொண்டிருந்த எனக்கு கொடுக்கலாமா வேண்டாமா என தோன்றவில்லை. மாறாக, இன்றியமையாத அந்தத் திறன்பேசியைத் தூக்கிக்கொண்டு ஓடி விடுவாரோ என்ற பயமே தோன்றியது. மேலும் தனது கையில் ஒரு திறன்பேசியை அவர் முன்பே வைத்து இருந்ததால் என்னவோ, சந்தேகம் கூடவே செய்தது. இணைய செய்தியில் பார்த்து சிரிக்க சிந்திக்க வைத்த நிகழ்வாக ஆகி விடுவோமோ என ஆழ் மனதில் இறங்கி ஒருவர் புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆதலால் அவரிடம் இல்லை என்று தலையாட்டி அமைதி காத்தேன்.

மனசாட்சியோ தகுந்த சாட்சியங்களை வைத்துக் குற்றவுணர்வைக்கொண்டு என்னை தண்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தொடங்கியது. பேருந்து வரும் , வாய்தா வாங்கி விடலாம் என பதற்றத்தின் உச்சாணிக்கொம்பில் இடம் ஒதுக்கி உட்கார்ந்திருந்தேன். சிறு நேரத்தில் அவர் பக்கத்தில் உட்கார்ந்த இன்னொரு வருங்கால பயணியிடம் அதே உதவியைக்கோரினார் . பார்த்தும் பார்க்காதவாறு என்ன நடக்கிறது என கவனித்தேன். திறன்பேசியை வாங்கிய அவர், அந்த பகுதியில் உள்ள அவரது நண்பரிடம் தான் இங்கு வந்துள்ளேன் என்னும் தகவல் ஒன்றை மட்டும் கூறிக் கொண்டு அழைப்பைத் துண்டித்தார். அந்த திறன்பேசியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

சில நேரத்தில் பேருந்தும் சரியாக வந்து சேர்ந்தது. இறுதியில் அனைத்தும் சுபமே என்று பேருந்தில் ஏறி நான் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி விரைந்தேன்.